My Blog List

Wednesday, October 28, 2020

ரௌத்திரம் பழகு

பெண்ணியம் காப்போம்!!

கற்பு எனும் கற்பனை..


பெண்குழந்தைகளை வளர்த்தல் என்பது லேசுப்பட்ட காரியமல்ல.. ஒரு தந்தை தன் வாழ்நாள் அனுபவங்களினால் தனது மகளை எதற்க்கும் எதிர்கொள்நிலைக்கு மாற்றவும்.. தோதான அனுபவங்களை அவளை அடையச்செய்வதன் ஊடாக சமூகம் பற்றிய நேரான மறையான கருத்துக்களை அவள் உணரச் செய்யவும்.. அந்தத்தந்தை பகீரதபிரயத்தனம் செய்யவேண்டி இருக்கும்.. வெறுமனே கராத்தே கிளாசுக்கு விடுவதாலும் ஹமாம் சோப் வாங்கிக் கொடுப்பதாலும் அந்த மனதைரியம் வந்துவிடுமா என்ன..

ஒரு நாள் முழுக்க கூலி வேலை செய்து தனது மகளின் வயிற்றுப்பிழைப்பையும் கல்வித்தேவையையும்  மாத்திரமாவது நிவர்த்தி செய்யலாம் என்று தன்னை வருத்தும் ஒரு கூலித்தொழிலாளியிடம்.. தனது மகளுக்கான நல்லது கெட்டவற்றை அடையாளம் காட்டவும், சமூகத்தின் பார்வைகளுக்கும்  பாய்ச்சல்களுக்கும் ஏற்ப வளைந்து கொடுக்காமல் ஓடுவதற்க்கான நுட்பத்தையும் கற்ப்பிக்க நேரம் இருக்குமா.. அப்போதைய பொழுதுகளில் சில மறையான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகையில் அதற்க்கான முன்னாயத்தம் இன்றி சரியான எதிர்வினைகளை பிறப்பிக்கத் தவறுகையில்.. அந்தப் பெண் மீது "அவன் கூப்பிட்டா உனக்கு எங்க போச்சு அறிவு " போன்ற மொன்னைத்தனமான விவாதங்கள் சரி வருமா.. 

ஒரு குழந்தை எழும்பி நடக்கவும் ஓடவும் எழுதவும் வாசிக்கவும் வழிகாட்டிகள் தேவைப்படுவது போல சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப எதிர்வினையாற்றவும் சமூகத்திலிருந்து தப்பிப்பிழைக்கவும் கற்பிக்கப்படல் அவசியம்.. உலகம் இன்னும் முழுமையாக நாகரீகமாக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.. வேண்டுமென்றால் விருத்தியடைந்த காடு என்று இதை விளம்பலாம்.. காட்டில் வாழ்வதைப்போலவே அதிகபட்ச முன்னாயத்தோடு சுயகரிசனையோடு இங்கே வாழப்பழக்கவேண்டும்.. [ இதில் தமிழ் எழுத்தாளர்களின் பங்கு மிக ஆழமானது.. வன்புணர்வாளர்கள்.. அவர்களை எதிர்கொண்ட நபர்களின் மனவெளிப்பாடுகள் தொடர்பான நிகழ்காலச்சித்திரங்களை அதிகபட்ச உண்மைத்தன்மையோடு அவர்கள் சமுகத்திற்க்கு அறிமுகப்படுத்தவேண்டும்..]

அனைத்துப் பெண்குழந்தைகளும் வளரும் சமுகம் சமனானது அல்ல.  அந்தந்த இடத்திற்கேற்ப சந்தர்பத்திற்கேற்ப எதிர்வினையாற்ற அவற்றிக்கு சொல்லிக்கொடுக்கப்பட வேண்டியது அவசியம்..

அதற்க்குத்தான் அதிகம் அதிகம் உங்கள் பிள்ளைகளை வாசிக்கப்பழக்குங்கள்.. பத்திரிக்கைகள்.. தரமான நேரான இலக்கியங்களை வாசிப்பதை அறிமுகப்படுத்துங்கள்.. மனம் விட்டு அதிகளவு சினேகபூர்வமாக அளவழாவுங்கள்.. வன்புணர்வு.. துஷ்பிரயோங்கள் பற்றிய நிகழ்கால உதாரணங்களை அறிமுகப்படுத்துங்கள்.. ஏதும் தவறான சிந்தைகள் வலுப்பெறின் அதை உணரவும் அதனினின்று மீளவும் வழி கூறுங்கள்.. மனதைரியம் தேவை அதைக் காட்டிலும் தன்னம்பிக்கை தான் தாக்குப்பிடித்தலின் முக்கிய பற்றுகோள் என்று உணர வையுங்கள்..

அவர்கள் உடல் மேல் அவர்களைத்தவிர வேறு எந்த நபரிற்கும் அதிகாரம் இல்லை என்றும்.. அந்த அதிகாரத்தை உரிமையை எவ்வாறு பேணலாம் என்றும் வகை கூறுங்கள்.. ஐயோ கற்பு போய்விட்டதே என்று பதறுவதை காட்டிலும் தனது உடலின் மீதான அதிகார மீறல் இன்னவரால் இந்நேரத்தில் ஏற்ப்பட்டது என சரியானவர்களிடம் அடையாளம் காட்டுவதனால் தண்டனைகளை பெற்றுக்கொடுக்கச் சொல்லிக் கொடுங்கள்..அதற்க்கு ஊக்குவியுங்கள்.. அதன் மூலமாக கற்பு என்னும் கற்பனையை பாதுகாக்கலாம் என்றும் உணர்த்துங்கள்.. தானாக அல்லாமல் வலுக்கட்டாயமாக கற்பை பறிக்க இயலாதென்றும்.. அந்த அடக்கு முறைக்கான பெயர் உடல் மீதான வன்முறை பிரயோகம் என்றும் உணர்த்துங்கள்..

இங்கே யாரும் உத்தமர்கள் இல்லை.. வேண்டுமானால் வருந்தித் திருந்தியவர்களாக இருக்கலாம்.. அல்லது கணநேரமும் தனது புனிதத்திற்க்கு களங்கம் வந்துவிடுமே என்ற ஆதங்கத்தில், தன் மேல் எப்போது வேண்டுமானாலும் சுமத்தப்பட தயாராக இருக்கும் அபாண்டத்திற்க்கு பதில் சொல்லவற்க்காக, தம்மை வாழ்நாள் முழுவதுமாக தயார்ப்படுத்திக் கொண்டிருப்பவர்களாக, தமது நிகழ்கால வாழ்க்கையைத் தொலைப்பவர்களாக இருக்கலாம்.. 

எந்தத்தவறுமே செய்யாத ஒருவர் சமூகத்தின் பால் பயந்து வாழ வேண்டி இருப்பதற்க்கான காரணமும்.. முற்றிலுமாக தவறுகளை மாத்திரமே இழைத்த ஒருவர் தனது அச்சத்தை தொலைத்து மேலும் புத்துணர்வுடன் தவறிழைக்கவும் எங்களது கலாச்சார கோட்பாடுகள் தான் முக்கிய காரணம்.. எதிர்வீட்டுக்காரன்.. எதிர்க்கடைக்காரன்.. புழங்கும் தெரு என குறிப்பிட்ட ஒரு சனத்தொகைக்குப் பயந்து கற்பு என்னும் கற்பனைக்காக உயிர்வெறுத்தல் என்பது எத்தனை அபத்தம்..

உண்மையில் விடயம் வெகு எளிது.. உங்கள் மாமிசத்திற்க்காக இரத்த வெறி பிடித்த ஒரு மிருகம் உங்களைச்சுற்றி வலம் வருகிறது.. அதை நையப்புடைத்து அடித்துக் கொல்வதா... அல்லது  அதன் முன் நிர்வாணமாக்கப்பட்டுவிட்டோமே என்னும் மன அங்கலாயப்புக்காக அதனிடம் சரணடைவதா.. முன் நிற்பது மிருகம் என்று அறியின் மானம் வெறுத்து அதன் குருதி கொணர்தலே மேல்... கற்பு என்னும் கற்பனையை உருவாக்கிவிட்டீர்கள்.. ஒன்று அதை சட்டை செய்யக்கூடாது.. அல்லது அதைக் காப்பாற்ற வாழ்நாள் முழுவதும் வழி செய்துகொண்டே இருக்கவேண்டும்.. இந்த இரண்டு வழிகளால் மாத்திரமே கற்பு எனும் வார்த்தைப் பிரயோகம் உங்கள் மேல் செலுத்தப் போகும் பிரம்மாஸ்திரத்தைத் தடுக்க இயலும்.

@perawritings 

No comments:

Post a Comment

Popular post